ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை பஞ்சராக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 179 ரன்கள் இலக்கை சேசிங் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்தனர். அவசரம் காட்டாமல் நிதானமாக ஆடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தனர். மயங்க் அகர்வால் 26 ரன்களில் (19 பந்து, 3 பவுண்டரி) பியுஷ் சாவ்லாவின் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த மன்தீப்சிங் தனது பங்குக்கு 27 ரன்கள் (16 பந்து, 2 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார்.அடுத்து 179 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேன் வாட்சனும், பாப் டு பிளிஸ்சிசும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு அபாரமாக ஆடினர். முந்தைய ஆட்டங்களில் சொதப்பியதால் கடும் விமர்சனத்திற்குள்ளான வாட்சன் அதற்கு பரிகாரம் தேடும் வகையில் மட்டையை பக்குவமாக சுழட்டினார். பிளிஸ்சிஸ்சின் பேட்டிங்கும் நேர்த்தியாக இருந்தது. கிறிஸ் ஜோர்டானின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார்.பவர்-பிளேயில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் திரட்டியது. இந்த கூட்டணியை உடைக்க பஞ்சாப் கேப்டன் ராகுல் யுக்திகளை பலவாறு மாற்றி அமைத்தும் கடைசி வரை பலன் இல்லை. வாட்சன், சர்வசாதாரணமாக பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டார். இதில் ஒரு பந்து 101 மீட்டர் தூரத்திற்கு பறந்தது. இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணியின் வெற்றிப்பயணம் சுலபமானது. ஷமியின் பந்து வீச்சில் சிக்சர், பவுண்டரியுடன் ஆட்டத்தை பிளிஸ்சிஸ் தித்திப்பாக முடித்து வைத்தார்.சென்னை அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. வாட்சன் 83 ரன்களுடனும் (53 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), பிளிஸ்சிஸ் 87 ரன்களுடனும் (53 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.
0 comments