சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வருகிற ஜூன் மாதம் திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் ரூ.230 கோடி செலவில் புதிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டும் பணி கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி தொடங்கியது. 5.50 லட்சம் சதுர அடியில் 7 தளங்களுடன் 1000 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது. வருகிற 2023 செப்டம்பர் மாதம் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த பணியை விரைவுபடுத்த கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கட்டுமான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிற ஜூன் மாதம் இந்த மருத்துவமனை திறக்கப்படும். கிண்டி பிரதான சாலையில் இருந்து 3 இடங்களில் நுழைவு வாயில் அமைக்கப்படுகிறது. அனைத்து நவீன வசதிகளுடன் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் இந்த ஆஸ்பத்திரி உதவிகரமாக இருக்கும். அதே போல் இந்த வளாகத்தில் முதியோருக்காக தனியாக ஒரு மருத்துவமனை கட்ட கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு ரூ. 87 கோடி ஒதுக்கியது. இந்த மருத்துவமனை கட்டுமான பணிகள் 2019-ல் முடிவடைந்த நிலையில் கொரோனா ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டது. இப்போது மீண்டும் ரூ. 4 கோடி மதிப்பில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு பணிகள் முடிந்துள்ளன. விரைவில் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.