பழம்பெரும் சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 92.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார் ஜூடோரத்தினம். அதிக படங்களில் பணியாற்றியதன் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவர் இடம் பெற்றுள்ளார். அத்துடன் போக்கிரி ராஜா தலைநகரம் உள்ளிட்ட சில படங்களில் நடிகராகவும் இவர் நடித்துள்ளார். எம்ஜிஆர் ,சிவாஜி ,ரஜினிகாந்த் , கமல் ஹாசன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்களுடன் பணியாற்றிய பெருமை ஜூடோ ரத்தினத்திற்கு உண்டு. தமிழ்நாடு அரசு இவரின் கலைத்திறனை பாராட்டி கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளது. இந்த சூழலில் ஜூடோ ரத்தினத்தின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூடோரத்தினம் மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் , ஜூடோ ரத்தினத்தின் உதவியாளர்கள் நிறைய பேர் சண்டை பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள். சண்டை பயிற்சியில் தனக்கென தனி பாணி உருவாக்கி சாதனை படைத்தவர் ஜூடோ ரத்தினம். உதவியாளர்களின் பாதுகாப்பை எப்போது கவனத்தில் கொண்டு சண்டை பயிற்சி மேற்கொள்வார். 93 ஆண்டுகள் வாழ்ந்த மறைந்துள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றார். சென்னை வடபழனியில் ஜூடோ ரத்தினத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள இடுகாட்டில் இன்று மாலை 3 மணி அளவில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.