சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் வசதி மூலமாக கடந்த ஆண்டு ரூ. 50,855 கோடி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதியன்று சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் வாயிலாக சுங்கக் கட்டணம் செலுத்தும் நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியது. ஃபாஸ்ட் டேக் அறிமுகபடுத்தப்பட்ட பின்னர் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலும், வாகனங்கள் காத்திருக்கும் நேரமும் பெருமளவில் குறைந்திருக்கிறது. இந்த நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கடந்த ஆண்டில்(2022) சுங்க கட்டணம் மூலமாக வசூல் செய்யப்பட்ட தொகை குறித்த விவரங்களை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பாஸ்டேக் வாயிலான வருவாய் ரூ.50,855 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டில் அந்த வருவாய் ரூ.34,778 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டில் அது 46% அதிகரித்துள்ளது. பாஸ்டேக் வாயிலான பணப்பரிவர்த்தனை 2021-ம் ஆண்டு ரூ.219 கோடியாக இருந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அது ரூ.324 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது வரை ஒட்டு மொத்தமாக 6.4 கோடி பாஸ்டேக் வில்லைகள் விற்பனை ஆகியுள்ளன. பாஸ்டேக் வசதியுடன் செயல்படும் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை கடந்த 2021-ம் ஆண்டில் 922-ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் 1,181-ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 323 சுங்கச்சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளது. சுங்கச்சாவடிகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.134.44 கோடி வசூலானதாகவும், அதிகபட்சமாக டிசம்பர் 24-ந் தேதி ரூ.144.19 கோடி வசூலானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.