சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அந்த வகையில் மார்ச் 1 ஆம் தேதியான இன்று வீட்டு உபயோக சிலிண்டர், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை தற்போது ரூ.1118.50 ஆக உள்ளது .
அதேபோல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.350.50 உயர்ந்துள்ளது. ஆட்டோக்களுக்கான எல்பிஜி விலையும் ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது.
கடைசியாக கடந்த ஜூலை 2022ல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விலை இன்றே அமலுக்கு வந்தது. புதிய விலைப்பட்டியலின் படி டெல்லியில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.1103, வணிக சிலிண்டர் விலை ரூ.2119.50 என்றளவில் விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கெனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர் .