சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். அவ்வாறு தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
“மீண்டும் உருமாறிய ஒமிக்ரான் மாறுபாடு கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் இன்று காலை 10மணி முதல் வெளிநாடுகளிலிருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.”
கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை மிரட்டி வந்த கொரோனா தொற்று, தற்போது உருமாறிய நிலையில், ஒமிக்ரான் மாறுபாடான பிஎப்.7 என்ற வைரஸ் சீனா, அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் 3 பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். தொடர்ந்து பிரதமர் மோடியும் கொரோனா நிலைமை பற்றி டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, சர்வதேச விமான பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விமான நிலையங்களில் இன்றுமுதல் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். முக்கியமாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பயணிகளை அவர்களின் நாடுகளின் அடிப்படையில் விமான நிறுவனங்களே தேர்வு செய்யலாம். அந்த பயணிகளிடம் இருந்து மாதிரிகளை சேகரித்த பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும்.
பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அந்த மாதிரிகளை மரபணு சோதனைக்காக அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.